பிறந்து 12 நாளேயான குழந்தையை தாயிடம் இருந்து பறித்து சென்று கடித்து கொன்ற குரங்கு
ஆக்ரா நகரில் பிறந்து 12 நாளேயான குழந்தையை தாயிடம் இருந்து பறித்து சென்ற குரங்கு ஒன்று அதனை கடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ரா,
உத்தரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் மொஹல்லா கச்சேரா பகுதியில் சன்னி என்ற பிறந்து 12 நாளேயான குழந்தையை அதன் தாய் மடியில் வைத்து இருந்துள்ளார்.
அங்கு திடீரென வந்த குரங்கு ஒன்று தாயிடம் இருந்து குழந்தையை பறித்து கொண்டு சென்றது. இதனால் குழந்தையின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனை தொடர்ந்து குழந்தையை தேடி குடும்பத்தினர் சென்றுள்ளனர். அந்த குழந்தை அருகிலுள்ள வீட்டின் முகப்பில் ரத்தம் சிந்திய நிலையில் தரையில் கிடந்துள்ளது.
உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை இறந்து விட்டது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனை நம்ப முடியாத அவர்கள் மற்றொரு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அங்கும் குழந்தை இறந்து விட்டது என்றே கூறப்பட்டு உள்ளது.
இதுபற்றி சுற்றுசூழல் ஆர்வலர் சரவண குமார் கூறும்பொழுது, குரங்குகளின் வாழ்விடங்கள் அழியும்பொழுது மற்றும் பசுமை சூழல் நிலையாக குறைந்து வரும்பொழுது அவை ஆத்திரமடைகின்றன என கூறினார்.
அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறும்பொழுது, ஆக்ரா நகரில் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை தாக்குவதுடன், அவர்களிடம் இருந்து பொருட்கள் மற்றும் கிடைப்பவற்றை குரங்குகள் பறித்து கொண்டு சென்று விடுகின்றன என தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று காலனி பகுதியில் வசிக்கும் சீமா குப்தா என்பவர் கூறும்பொழுது, மக்கள் தங்களது வீட்டு முகப்புகளுக்கு தைரியமுடன் செல்ல முடிவதில்லை. அப்படி செல்பவர்கள் தங்களது வீடுகளை இரும்பு வலைகளால் கூண்டுகள் போன்று மூடி இருக்க வேண்டும். உங்களது வீட்டு கதவுகளை திறந்து வைத்து விட்டு சென்று விடமுடியாது என்று தெரிவித்துள்ளார்.