மத்திய அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு பங்களிப்பு 14% ஆக உயரும்?

மத்திய அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

Update: 2018-12-07 07:44 GMT
புதுடெல்லி, 

தேசிய ஓய்வூதிய திட்டத்தில்  கீழ் 2004-ம் ஆண்டு ஜனவரி அல்லது அதற்கு பின் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையில் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் 14 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக மத்திய அரசு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்சன் தொகை அதிரடியாக அதிகரிக்கும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள தொகையில் 10 சதவீதம் பென்சன் நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. மத்திய அரசும் 10 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முடிவின்படி, மத்திய அரசு அளிக்கும் பென்சன் நிதி பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனால் 60 வயதில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியரின் பென்சன் தொகை வெகுவாக அதிகரிக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் பங்களிப்பை அதிகரிக்க நிதி மசோதாவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய பயன் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது 5 மாநில தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய பயன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு நிறுத்தி வைத்துள்ளது. 2004-ம் ஆண்டு திட்டத்தின் படி, வருமான வரி விதியின் கீழ் ஊழியர்களின் பங்களிப்பு தொகையில் வரி விலக்கு அளிக்க முடியாது. தற்போது இந்த விதியிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

மேலும் செய்திகள்