பேட்ட பட விநியோக உரிமை வைத்திருக்கிறேன் என கூறி பணமோசடி செய்த பட இயக்குநர் கைது
நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட பட விநியோக உரிமை வைத்திருக்கிறேன் போன்ற பல வசீகர பேச்சுகளால் பணமோசடி செய்த பட இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
கன்னட திரைப்பட இயக்குநராக இருப்பவர் சுதாகர். இவரது கூட்டாளிகள் நல்லையன் பீட்டர் மற்றும் விஜய குமார். இந்த நிலையில் 3 பேரும் கே.டி. திவ்யா என்ற பெண்ணை அணுகி அவரிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணமுதலீடு செய்யலாம் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து, பட தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருவாய் ஈட்டலாம் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து இயக்குநர், வர்தனா, கதவிசித்ரா மற்றும் ஹூலிதுர்கா ஆகிய படங்களை தயாரித்து உள்ளேன் என்றும் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட பட விநியோக உரிமையை வைத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பி அந்த பெண்ணும் ரூ.85 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவரை 3 பேரும் மோசடி செய்து விட்டனர் என அந்த பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து இயக்குநர் மற்றும் அவரது 2 கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.