சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய அரசின் உத்தரவு ரத்து -சுப்ரீம் கோர்ட்

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய அரசின் உத்தரவு ரத்து என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2019-01-08 05:41 GMT
புதுடெல்லி,

மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

 தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டை  நாடினார். 

அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அவசர வழக்காக விசாரித்து வந்தது.

 இந்த வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய  அரசின் உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. அலோக் வர்மா தொடர்ந்து சிபிஐ இயக்குநராக செயல்படுவார் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்