பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 850 இந்திய கைதிகளை விடுதலை செய்ய சவுதி அரேபியா இளவரசர் உத்தரவு

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சவுதி அரேபியா சிறையில் இருக்கும் 850 இந்திய கைதிகளை விடுதலை செய்ய சவுதி அரேபியா இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-02-20 17:37 GMT
புதுடெல்லி,

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று  டெல்லிக்கு வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடியும், இளவரசர் முகமது பின் சல்மானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு இந்தியாவுக்கு சவுதி அரேபியா முழு ஒத்துழைப்பு தரும் என அவர் உறுதி அளித்தார். இரு தரப்பிலும் 5 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. 

இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதற்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மான் முன் வந்துள்ளார்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சவுதி அரேபியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 850 இந்திய கைதிகளை விடுதலை செய்ய சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனையடுத்து அவர்கள் அனைவரும் கூடிய விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்