காஷ்மீரில் பாதுகாப்பு படை தாக்குதல்; 2 ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Update: 2019-02-27 04:18 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் மீமெந்தர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  அவர்களுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.  இந்த சம்பவத்தில் வீரர்கள் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதற்கு பதிலடியாக அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியதில் 350 தீவிரவாதிகள் பலியாகினர்.  இந்த நிலையில், காஷ்மீரில் பதுங்கி இருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

மேலும் செய்திகள்