புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் விருந்தினர் இல்லத்தில் மடிக்கணினி, செல்போன்களை திருடிய நபர் கைது
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் விருந்தினர் இல்லத்தில் இருந்து மடிக்கணினி மற்றும் செல்போன்களை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியின் ரோமன் ரோலண்ட் சாலையில் அரவிந்தர் ஆசிரமத்தின் விருந்தினர் இல்லம் அமைந்துள்ளது. இங்கிருந்து மடிக்கணினி ஒன்றும், 5 செல்போன்களும் கொள்ளை போயுள்ளன என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். இதில், அந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என தெரிய வந்துள்ளது. அவரிடம் மடிக்கணினி மற்றும் 5 செல்போன்கள் இருந்துள்ளன.
இதனை அடுத்து நடந்த தொடர் விசாரணையில், அவர் அரவிந்தர் ஆசிரமத்தின் விருந்தினர் இல்லத்தில் இருந்து திருடிய பொருட்கள் என ஒப்பு கொண்டுள்ளார். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் கிளியனூர் பகுதியை சேர்ந்த அருண் என்ற இளைஞர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.