காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற வாலிபர்

சினிமா பாணியில் காரை தடுக்க காரில் முன்னாடி தொங்கியபடி 2 கிலோமீட்டர் சென்ற வாலிபர். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-07 08:03 GMT
காசியாபாத்,

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் பகுதியில்  இரண்டு நபர்கள் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவர் காரில் ஏறிச்செல்ல முயல, மற்றொருவர் அவரை தடுத்தார். காரில் அமர்ந்த நபர், அவரைத் தள்ளிவிட்டுவிட்டுக் காரை எடுக்க முயற்சித்தார். ஆனால் அவரோ பேனட்டின் மீது ஏறி படுத்தவாறே, காரில் இருந்த நபரைச் செல்ல விடாமல் தடுக்கப் பார்த்தார்.

கார் ஓட்டுநர் அவர் இருப்பதை பற்றி கவலைப்படாமல் விரைவாகக் காரை ஓட்ட ஆரம்பித்தார். தடுமாறி விழப்போன நபர், சுதாரித்து பேனட்டை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்குக் கார் அதிவேகத்தில் சென்றது. சாலையில் இருந்த தடுப்பு மீது மோதப்போன கார்,  சுற்றிலும் மக்கள் கூடியதால் நின்றது.

சினிமா பாணியில் இந்த சம்பவம் நடந்ததால், வேடிக்கை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பேனட்டில் இருந்து இறங்கிய நபர், கார் ஓட்டுநரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதைத் தொடர்ந்து கார் ஓட்டுநரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்