நீங்க முதல்வராக வேண்டும்... நீங்க பிரதமராக வேண்டும்... உதயமானது புதிய கூட்டணி

பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

Update: 2019-03-15 12:15 GMT
ஆந்திர மாநில முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை அமைத்துள்ளார். ஆந்திரா, தெலுங்கானாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது. ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் கவனம் செலுத்துகிறது. கூட்டணி அறிவிப்பு லக்னோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் ஆந்திராவில் பா.ஜனதாவுடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அக்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இப்போது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார்.

 கூட்டணியை அறிவித்து மாயாவதி பேசுகையில், ஆந்திர மாநில மக்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், மாநில சட்டசபைத் தேர்தலிலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். புதியவர்கள் அரசுக்கு வரவேண்டும் என்பது மக்களின் ஆர்வமாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனசேனா மற்றும் பிற பிராந்திய கட்சிகளுடன் நாங்களும் இணைந்து போட்டியிடுகிறோம் என்றார். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டனர். மாயாவதி பேசுகையில் நீங்கள் ஆந்திர மாநில முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பவன் கல்யாண், நீங்கள் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என மாயாவதியிடம் தெரிவித்துள்ளார். நீங்கள் பிரதமர் ஆவதுதான் எங்களுடைய விருப்பமாகும் என குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார். சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இதில் உடன்படவில்லை. இப்போது பகுஜன் சமாஜ் கட்சி அவருக்கு எதிராகவே பவன் கல்யாணுடன் கைகோர்க்கிறது.

மேலும் செய்திகள்