குஜராத்தில் தன்னை கடித்த விஷபாம்பை கடித்து கொன்று விட்டு உயிரிழந்த முதியவர்
குஜராத்தில் தன்னை கடித்த விஷபாம்பை கடித்து கொன்று விட்டு முதியவர் உயிரிழந்துள்ளார்.
வதோதரா,
குஜராத்தின் மஹிசாகர் மாவட்டத்தில் அஜன்வா கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் விளைந்த மக்காசோளம் லாரியில் ஏற்றப்பட்டது. அந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், பாம்பு ஒன்று அங்கு திடீரென வந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பியோடினர்.
ஆனால் பர்வாத் கலா பாரியா (வயது 60) என்ற முதியவர் அங்கேயே நின்றுள்ளார். தனக்கு பாம்புகளை பிடித்துள்ள முன்அனுபவம் உள்ளது என கூறியுள்ளார். பின் அவர் பாம்பை கையில் எடுக்க அது அவரது கைகள் மற்றும் முகத்தில் கடித்துள்ளது. எனினும், பதிலுக்கு பர்வாத் பாம்பை கடித்து கொன்று விட்டார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விஷம் ஏறியதில் சிகிச்சை பலனின்றி பர்வாத் உயிரிழந்து விட்டார். இதுபற்றி அஜன்வா போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.