காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் அதிருப்தி: கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் - எடியூரப்பா பரபரப்பு தகவல்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் அதிருப்தியில் உள்ளதால், கர்நாடகத்தில் விரைவில் பா.ஜனதா ஆட்சி அமையும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-10 19:10 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளை ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதுபோல் மந்திரி பதவி கிடைக்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். அவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும். அதன்மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி’ என்று கூறினார்.

மேலும் செய்திகள்