குஜராத்தில் வினோத வழக்கம்; மணமகளை திருமணம் செய்யும் மணமகனின் சகோதரி

குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மணமகளை, மணமகனின் சகோதரி திருமணம் செய்யும் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

Update: 2019-05-26 07:09 GMT
சோட்டா உதேபூர்,

குஜராத்தில் சோட்டா உதேபூர் நகரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் என்ற 3 கிராமங்கள் உள்ளன.  இந்த கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியினரிடம் வினோத நடைமுறை வழக்கத்தில் உள்ளது.  இங்குள்ள ஆண் ஒருவர் திருமணம் செய்வதற்காக ஷெர்வானி உடை அணிந்து, தலையில் சபா (பாரம்பரிய தலைப்பாகை) அணிந்து, பாரம்பரிய வாள் ஏந்தி நின்றாலும் அவர் தனது திருமணத்தில் கலந்து கொள்ள முடியாது.  மணமகன் தனது தாயாருடன் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

அவருக்கு பதிலாக திருமணம் ஆகாத அவரது சகோதரி அல்லது அவரது குடும்பத்தில் உள்ள கன்னிப்பெண் ஒருவர் மணமகன் போன்று அனைத்து சடங்குகளையும் செய்வார்.  மணமகளின் வீட்டிற்கு சென்று அவரை மணமுடித்து, பின்பு அவரை அழைத்து வருவார்.

இந்த வழக்கம் பல காலங்களாக நடந்து வருகிறது.  இதனை நாங்கள் கடைப்பிடிக்காவிட்டால், துன்பங்கள் வந்து சேரும் என உள்ளூர்வாசியான காஞ்சிபாய் ரத்வா கூறுகிறார்.  சிலர் இந்த நடைமுறையை பின்பற்ற கூடாது என செயல்பட்டனர்.  அவர்களது திருமணம் முறிந்து போனது.  அல்லது அவர்களது திருமண வாழ்வு சிறப்படையவில்லை.  அல்லது வேறு சில விவகாரங்களில் அவர்கள் சிக்கி கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன என கிராம தலைவர் ராம்சிங்பாய் ரத்வா கூறியுள்ளார்.

இந்த 3 கிராமங்களின் ஆண் தெய்வங்கள் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரிகளாக உள்ளனர்.  அவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் மணமகன்கள் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.  இதனால் தீங்கிலிருந்து அவர்களை தெய்வங்கள் காக்கும் என கிராமத்தினர் நம்புகின்றனர்.

மேலும் செய்திகள்