உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் கங்கையில் மூழ்கி பலி

உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கங்கையில் மூழ்கி பலியாகினர்.

Update: 2019-06-10 18:45 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் உறவினர்களுடன் ஒரு நேர்த்திக்கடன் செலுத்த அங்குள்ள கங்கை நதிக்கு சென்றனர். படிக்கட்டில் நின்றிருந்தபோது, ஒரு வாலிபர் கால் வழுக்கி நீருக்குள் விழுந்து மூழ்க தொடங்கினார்.

அவரை காப்பாற்றும் நோக்கத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஒருவர்பின் ஒருவராக தண்ணீருக்குள் குதித்தனர். ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், எல்லோரையும் தண்ணீர் அடித்துச் சென்றது. அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, நீச்சல் தெரிந்தவர்கள் தண்ணீரில் குதித்தனர்.

8 பேர் அரை மயக்கநிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நீரில் மூழ்கிய மீதி 2 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்