வாயு புயல் போர்பந்தர்-டையூ இடையே நாளை கரையை கடக்கும் -இந்திய வானிலை மையம் அறிவிப்பு
வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி, குஜராத் மாநிலம் போர்பந்தர் -டையூ இடையே நாளை காலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென்மேற்கு பருவமழை 8-ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது.
வாயு புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி.மீ வரை இருக்கக் கூடும்.
மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.