யாருடைய மகனாக இருந்தாலும் அரசு அதிகாரியைத் தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது -பிரதமர் கண்டனம்
யாருடைய மகனாக இருந்தாலும் அரசு அதிகாரியைத் தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி
கடந்த வாரம் புதனன்று ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற அதிகாரியை பாஜகவின் மத்தியப்பிரதேச மாநில முக்கியத் தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆகாஷ் விஜய் வர்கியா கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டினார்.
இச்சம்பவம் எதிர்க்கட்சிகளாலும், மக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது யாருடைய மகனாக இருந்தாலும் சட்டத்தை மீறுபவர்களை விதி விலக்கின்றி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
பாஜக தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி என்டிடிவிக்கு தெரிவித்ததாவது:-
பிரதமர் மிகவும் வருத்தப்பட்டார். தவறாக நடந்து கொள்ளவோ அல்லது கட்சியை பயன்படுத்தவோ அல்லது பொதுவில் ஆணவம் காட்டவோ யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறினார். இதுபோன்ற எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் கூறியதாக கூறினார் .