சந்திரயான்-2 நிலவில் தரை இறங்குவதுதான் விக்ரம் சாராபாய்க்கு உண்மையான அஞ்சலி - பிரதமர் மோடி பேச்சு

சந்திரயான்-2 நிலவில் தரை இறங்குவதுதான் விக்ரம் சாராபாய்க்கு உண்மையான அஞ்சலி என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2019-08-12 23:30 GMT
புதுடெல்லி,

இந்திய விண்வெளி திட்டங்களின் தந்தை என்று புகழப்படுபவரும், ‘இஸ்ரோ’ நிறுவனருமான விக்ரம் சாராபாய் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது. அதில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இதில், பிரதமர் மோடி பேசிய வீடியோ செய்தி, அரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டது. பிரதமர் மோடி பேசியதாவது:-

டாக்டர் ஹோமிபாபா மறைந்தபோது, இந்திய விஞ்ஞான உலகத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போது, விக்ரம் சாராபாய், தனது திறன் மற்றும் தலைமைப்பண்புகளால் விஞ்ஞானத்துக்கு புதிய பரிமாணத்தை உண்டாக்கினார். அவர் விஞ்ஞானத்தையும், இந்திய கலாசாரம், சமஸ்கிருதம் ஆகியவற்றையும் ஊக்குவித்தார். தனது அலுவல்களுக்கு மத்தியில் மாணவர்களுக்கு நேரம் ஒதுக்கினார்.

அவரது கொள்கைகள், இந்தியாவை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் வலிமையான நாடாக்க உதவியது. அவர் விட்டுச்சென்ற பணிகளை மக்களிடம் கொண்டு செல்வது நமது கடமை. ஆகவே, இஸ்ரோ நடத்தும் ஆன்லைன் வினாடி-வினா போட்டியில் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

சந்திரயான்-2-ல் உள்ள ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரை இறங்கப்போகிறது. அது தரை இறங்குவதுதான், விக்ரம் சாராபாய்க்கு கோடிக்கணக்கான இந்தியர்கள் உண்மையான உணர்வுடன் செலுத்தும் அஞ்சலி ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்