கடன் தொல்லையால் விபரீத முடிவு: மனைவி, மகன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற தொழில் அதிபர் - தானும் தற்கொலை செய்த பரிதாபம்

கர்நாடக மாநிலத்தில் கடன் தொல்லையால் மனைவி, மகன் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-16 10:59 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு தட்டஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 38). தொழில் அதிபர். இவருடைய மனைவி நிகிதா (28), மகன் ஆர்ய கிருஷ்ணா (5). தந்தை நாகராஜூ பட்டாச்சார்யா (70), தாய் ஹேமலதா (55).

ஓம்பிரகாஷ் அனிமேஷன் மற்றும் டேட்டா பேஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தொழிலுக்காக பலரிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு தொந்தரவு செய்ததால் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு சுற்றுலா சென்ற ஓம்பிரகாஷ் அங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அதிகாலை விடுதியை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் அங்குள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், கடன் தொல்லையாலும் ஓம்பிரகாஷ், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்கு அவருடைய குடும்பத்தினரும் சம்மதித்ததாக தெரிகிறது.

இதையடுத்து ஓம்பிரகாஷ், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தந்தை நாகராஜூ பட்டாச்சார்யா, தாய் ஹேமலதா, மனைவி நிகிதா, மகன் ஆர்ய கிருஷ்ணா ஆகியோரை சுட்டார். இதில் குண்டுகள் நெற்றியில் பாய்ந்ததால் அவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு ஓம்பிரகாசும் தற்கொலை செய்துகொண்டார்.

ஓம்பிரகாஷ் தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது நண்பரிடம் அதுபற்றி தெரிவித்தார். அவரது நண்பர் குண்டலுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.

ஓம்பிரகாசின் மனைவி நிகிதா கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்