பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Update: 2019-09-11 22:45 GMT
மதுரா,

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தின் மதுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசும்போது, இந்த தாக்குதலையும் நினைவு கூர்ந்தார். குறிப்பாக பயங்கரவாதத்தின் இன்றைய நிலை குறித்து அவர் எடுத்துரைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பயங்கரவாதம் இன்று ஒரு தத்துவமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு எல்லையும் கடந்து பரவி வரும் இது, ஒரு சர்வதேச பிரச்சினையாகவும், உலகளாவிய அச்சுறுத்தலாவும் மாறிவிட்டது. இந்த பயங்கரவாதத்தின் வலிமையான வேர்கள் அனைத்தும் நமது அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) வளர்க்கப்படுகின்றன’ என்று தெரிவித்தார்.

இந்த தத்துவம் மற்றும் பயங்கரவாதத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுப்போருக்கும் எதிராக உலக நாடுகள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுத்திறமையுடன் இருப்பதாகவும், ஏற்கனவே இதை நிரூபித்துள்ள நாங்கள் எதிர்காலத்திலும் அதை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்