பீகாரில் தனியார் வங்கியில் ஹெல்மெட் அணிந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல்
பீகாரில் தனியார் வங்கியில் ஹெல்மெட் அணிந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முசாபர்பூர்,
பீகாரில் முசாபர்பூர் நகரில் கோபர்சஹி பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்று பணிகள் நடந்து கொண்டிருந்தன.
இதற்கு மத்தியில் ஹெல்மெட் அணிந்த 6 கொள்ளையர்கள் வங்கிக்குள் திடீரென புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த காவலாளியின் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தங்களிடம் வைத்திருந்த கைத்துப்பாக்கிகளை உயர்த்தி காட்டியபடி சுற்றி இருந்தவர்களை அச்சுறுத்தினர்.
இதன்பின் அவர்களில் சிலர் வங்கிக்குள் இருந்த ரூ.8 லட்சத்து 5 ஆயிரத்து 115 அளவிலான தொகையை கொள்ளையடித்து விட்டு பையில் போட்டு கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் முழுவதும் கண்காணிப்பு கேமிராவில் காட்சிகளாக பதிவாகி உள்ளன.
இதுபற்றி முசாபர்பூர் போலீஸ் சூப்பிரெண்டு மனோஜ் கூறும்பொழுது, ஒரு நிமிடத்திற்குள் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. இது ஒரு வித்தியாச வழக்கு. அவர்கள் 6 பேர் கும்பலாக வந்துள்ளனர். அவர்களில் இரண்டு, மூன்று பேர் மைனர் சிறுவர்கள் போன்று தெரிகின்றனர். இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.