மகாராஷ்டிராவில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்; பா.ஜ.க. உள்ளூர் தலைவர் உள்பட 5 பேர் பலி

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. உள்ளூர் தலைவர் உள்பட 5 பேர் மர்ம நபர்களின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2019-10-07 01:39 GMT
ஜல்காவன்,

மகாராஷ்டிராவின் ஜல்காவன் நகரில் பூஷவால் பகுதியில் வசித்து வந்தவர் பா.ஜ.க. உள்ளூர் தலைவர் ரவீந்திரா காரத்.  இவரை வீட்டுக்கு வெளியே வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியே வந்துள்ளனர்.  இதில் அவரது குடும்பத்தினர் 3 பேர் மற்றும் அவரது மகனின் நண்பர் என 5 பேர் துப்பாக்கிகளால் சுடப்பட்டனர்.  பின்பு ஆத்திரம் தீராமல் அவர்கள் மீது ஆயுதங்களால் கொடூர முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இதில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பா.ஜ.க. உள்ளூர் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 5 பேர் மர்ம நபர்களால் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்