காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வாட்ஸ்அப்பில் வெளியிட்ட 4 பேர் கைது
குஜராத்தில் காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வாட்ஸ்அப்பில் வெளியிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பலன்பூர்,
குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் சிலர் சண்டை போட்டது பற்றிய புகார் ஒன்று அகதலா காவல் நிலைய போலீசாருக்கு வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் 5 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவரை விசாரணைக்காக அழைத்து விட்டு, மற்றவர்களை வேறொரு அறையில் அமரும்படி போலீசார் கூறியுள்ளனர்.
அந்த அறையில் இருந்தவர்கள் டிக்டாக்கிற்காக வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளனர். பின்பு விசாரணை முடிந்து அவர்கள் சென்று விட்டனர். இந்நிலையில், அவர்களில் ஒருவர் காவல் நிலையத்தில் பதிவு செய்திருந்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோ வாட்ஸ்அப்பிலும் பரவி போலீசாருக்கு சென்றுள்ளது. இதன் அடிப்படையில் தகவலறியும் சட்டம் மற்றும் ஐ.பி.சி.யின் பிரிவு 505ன் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். பின்பு 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.