திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை

ப. சிதம்பரத்திடம், விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் டெல்லி திகார் சிறைக்கு சென்றுள்ளனர்.

Update: 2019-10-16 03:38 GMT
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. பின்னர் அவருடைய காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நாளை (வியாழக்கிழமை) வரை நீட்டித்து உள்ளது.

இதற்கு மத்தியில், சிதம்பரத்திடம்  விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி,  இன்று காலை 3  அமலாக்கத்துறை அதிகாரிகள், திகார் சிறைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் செய்திகள்