கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு: யோகி ஆதித்யநாத்
கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
லக்னோவில் கடந்த 18-ஆம் தேதி இந்து சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் வைத்து கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக மூன்று பேரை உத்தரப்பிரதேச காவல் துறையினர் கைது செய்தனர்.
கொல்லப்பட்ட இந்து தலைவர் கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது:- “கொல்லப்பட்ட இந்து தலைவர் கமலேஷ் திவாரி குடும்பத்திற்கு ரூ .15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சீதாபூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்முதாபாத் வட்டத்தில் ஒரு வீடும் அவரது குடும்பத்திற்காக வழங்கப்படுகிறது.
உயிரிழந்த இந்து சமாஜ் கட்சியின் கமலேஷ் திவாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதான வழக்கு விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும். திவாரி படுகொலைச் சதியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.