‘முத்தலாக்’கை எதிர்த்த பெண்ணுக்கு விஷம் கொடுத்தனர்

முத்தலாக்கை எதிர்த்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் விஷம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2019-11-01 20:14 GMT
பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஹமத். இவருக்கும் குஷ்பு என்ற பெண்ணுக்கும் இரண்டரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு, குஷ்புவை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, வேலை விஷயமாக ரஹமத் வெளிமாநிலத்துக்கு சென்றார்.

அங்கிருந்தபடியே, குஷ்புவிடம் தொலைபேசியில் மூன்று தடவை ‘தலாக்’ சொன்னார். இதுகுறித்து கிராம பெரியவர்களிடம் கூறியபோது, ரஹமத் திரும்பி வரும்வரை காத்திருக்குமாறு கூறினர்.

ரஹமத் திரும்பி வந்தபோது, குஷ்புவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். குஷ்பு எதிர்ப்பு தெரிவிக்கவே, அவருக்கு ரஹமத் குடும்பத்தினர் பூச்சி மருந்து கொடுத்து குடிக்கச் செய்தனர். இதுதொடர்பாக முத்தலாக் தடை சட்டம், கொலை முயற்சி, வரதட்சணை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் ரஹமத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

மேலும் செய்திகள்