ஆந்திராவில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் குழந்தை பலி
ஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலியானது.
ஐதராபாத்,
ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்ஷ்மி என்பவர் நேற்று தனது 11 மாத குழந்தை மோகாரினிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
உணவை சாப்பிட மறுத்த குழந்தை அங்கும் இங்குமாக ஓடியது. அப்போது வீட்டின் உள்அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் வயரை தவறுதலாக இழுத்ததில் அது குழந்தையின் மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.