அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது - பிரதமர் மோடி

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-09 08:55 GMT
புதுடெல்லி,

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், மற்றும் போப்டே ஆகியோர் கொண்ட  5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பினை அளித்தது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்த  நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த 3 தரப்புக்கும் நிலம் சொந்தமல்ல என்று குறிப்பிட்டனர். 

இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்களுக்கு  மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். மொத்தம் ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பு, வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடி கருத்து

அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில்  பதிவிட்டுள்ளதாவது;  “அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது. நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை அயோத்தி தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ தேச பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்