குடியுரிமை திருத்த மசோதா: மத அடிப்படையில் இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயற்சி - பினராயி விஜயன்

குடியுரிமை திருத்த மசோதா மூலம் மத அடிப்படையில் இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-12-12 15:05 GMT
திருவனந்தபுரம்,

குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை திருத்த சட்ட மசோதா  வழி வகை செய்கிறது. 

ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும்.  குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்தநிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்,

குடியுரிமை திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது.  மத அடிப்படையில் இந்தியாவை பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மையை நாசப்படுத்தும் நடவடிக்கை என்று கூறியுள்ளார். 

மேலும் இந்திய பாராளுமன்றத்தின்  இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்