குடியுரிமை பெறும் இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள்? மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி
குடியுரிமை பெறும் இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள்? என்று மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபையில் நேற்று 4-வது நாளாக கவர்னரின் உரை மீதான உறுப்பினர்கள் விவாதத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெறும் புலம்பெயர்ந்த இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். அதற்கான திட்டம் உங்களிடம் (மத்திய அரசு) இருக்கும் என நான் நினைக்கவில்லை’ என்றார்.
பசுமாட்டின் பயன்பாடு குறித்து வீர சாவர்க்கர் கூறிய விஷயத்தில் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார். ‘பசு பயனுள்ள விலங்கு. ஆனால் அது பயனளிக்க உதவாதபோது அதை வெட்டி உணவாக பயன்படுத்தலாம்’ என வீரசாவர்க்கர் கூறியிருந்ததை நினைவுகூரும் வகையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு பா.ஜனதாவுக்கு கேள்வி எழுப்பினார்.