36 மந்திரிகளில் 5 பேர் காஷ்மீருக்கு பயணம்: பயங்கரவாத தாக்குதல் பகுதிகளுக்கு செல்ல தயக்கம்

36 மந்திரிகளில் 5 பேர் காஷ்மீருக்கு பயணம் செய்கிறார்கள்.

Update: 2020-01-20 21:27 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் பதற்றம் அதிகமானது. இதனை தணிக்க மத்திய மந்திரிகள் அடிக்கடி காஷ்மீரில் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைப்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மத்திய மந்திரிகள் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 8 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ரமேஷ் பொக்ரியால், முக்தர் அப்பாஸ் நக்வி, ஸ்ரீபத் நாயக், கிஷண் ரெட்டி ஆகியோர் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

36 மத்திய மந்திரிகளில் 5 மந்திரிகள் மட்டும் இப்போது இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும், இதுபோல் இன்னும் ஜம்மு பகுதியில் 50 நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் பயங்கரவாத தாக்குதல் அச்சம் நிலவும் புல்வாமா, சோபியான், அனந்த்நாக், குல்காம், புட்கம், குப்வாரா, பண்டிபோரா போன்ற பகுதிகளில் மத்திய மந்திரிகளின் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்