அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவோம்; 182 பெண்களை மிரட்டி, பணம் பறித்த 2 தொழிலதிபர்கள் கைது

வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என 182 பெண்களை மிரட்டி, பணம் பறித்த 2 பிரபல தொழில் நிறுவன குடும்ப உறுப்பினர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-01-30 15:53 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த வழக்கை கொல்கத்தா போலீசார் விசாரித்து வந்தனர்.  இதில், பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகா மற்றும் பிரபல பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் அவரது நண்பரான ஆதித்ய அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

முதலில் ஒரு பெண்ணுடன் நட்புடன் பழகுவர்.  பின்னர் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உறவை வளர்த்து கொள்வர்.  அந்தரங்க விசயங்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்வர்.

இதன்பின் அவர்களுடனான உறவை முறித்து கொள்வர்.  அந்த பெண்ணை மிரட்டி பணம் பறிக்கும் செயலை தொடங்குவர்.  பணம் பறிப்பது ஒன்றையே அவர்கள் முழு நோக்கமுடன் கொண்டு செயல்பட்டு உள்ளனர்.  இதுபோன்று 182 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டல் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம் சிக்கியவர்களில் ஒரு பெண், கடந்த வருடம் நவம்பரில் கொல்கத்தா போலீசாரின் சைபர் கிரைம் பிரிவில் அளித்த புகாரின் பேரில் இந்த செயல்களுக்கு உடந்தையாக இருந்த கைலாஷ் யாதவ் கடந்த 10ந்தேதி கைது செய்யப்பட்டார்.

அந்த பெண்ணிடம், பணம் தரவில்லை எனில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என கைலாஷ் மிரட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்பின்பே லோகரூகா மற்றும் அகர்வால் கைது செய்யப்பட்டனர்.  அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய லேப்டாப் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அந்த 3 பேரும் நகர நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களை வருகிற பிப்ரவரி 6ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்