நன்கொடை அளிப்போருக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம்!

பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-01 12:05 GMT
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது; இதுவரை 38 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 132 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் போராட்டத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகள் நிதியில் (PM-CARES FUND) நன்கொடைகளுக்கு 100% வரி நிவாரணம் வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இப்போது பி.எம்-கேர்ஸ் நிதிக்கு வழங்கப்படும் நன்கொடை ஐ.டி சட்டத்தின் 80 ஜி பிரிவின் கீழ் 100% விலக்கு பெற தகுதியுடையதாக இருக்கும் என்று அரசாங்கம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், மொத்த வருமானத்தில் 10% கழிப்பதற்கான வரம்பு பி.எம்-கேர்ஸ்  நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைக்கும் பொருந்தாது.

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்