எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-04-08 03:38 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் சுமார் 184 -க்கும்  மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், 40- க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு  இன்றோடு 15 நாட்கள் ஆகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 4,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவிலும் வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இத்தகைய சூழலில், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.  காலை 11 மணியளவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி  ஆலோசனை நடத்துகிறார்.இக்கூட்டத்தின் போது கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடவும், தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்