பிரதமர் நிவாரண நிதிக்கு ஒருவருடத்திற்கு மாதம் தோறும் ரூ.50,000 வழங்குவதாக பிபின் ராவத் அறிவிப்பு

பிரதமர் நிவாரண நிதிக்கு ஒருவருடத்திற்கு மாதம் தோறும் 50,000 ரூபாய் வழங்குவதாக பிபின் ராவத் அறிவித்துள்ளார்.

Update: 2020-05-24 15:14 GMT
புதுடெல்லி,

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தனது மாத சம்பளத்தில் இருந்து, பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு ரூ.50 ஆயிரத்தை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடந்த மார்ச் மாதம் அவர் கடிதம் எழுதினார்.  

அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அவரது சம்பளத்தில் இருந்து ரூ.50,000 பிடித்தம் செய்யப்பட்டது. அடுத்த 11 மாதங்களுக்கு அவரது சம்பளத்தில் இருந்து 50,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ தலைமையக ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஒருநாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது ஒருமாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரும், கடலோர காவல்படையின் முன்னாள் உறுப்பினருமான ராஜேந்திர சிங்கும், தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், ஆயுதப்படைகள் சார்பில் முன்னின்று செயல்படும் பிபின் ராவத், சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முப்படையினரை தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

மேலும் செய்திகள்