புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட 4 ரெயில்கள் மட்டுமே 72 மணி நேரம் தாமதம்: ரெயில்வே வாரியம் தகவல்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட 4 ரெயில்கள் மட்டுமே 72 மணி நேரம் தாமதம் ஆனதாக ரெயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்கள் தாமதமாக செல்வதாக பரவலாக பேசப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 28-ந் தேதிவரை, மொத்தம் 3 ஆயிரத்து 840 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 52 லட்சம்பேர் பயணம் செய்துள்ளனர். 90 சதவீத ரெயில்கள், வழக்கமான எக்ஸ்பிரஸ், மெயில்களை விட அதிக வேகத்தில்தான் இயக்கப்படுகின்றன.
4 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இருப்பிடத்தை சென்றடைய 72 மணி நேரம் ஆகியுள்ளது. கடந்த 20-ந் தேதியில் இருந்து 24-ந் தேதிவரை, உ.பி., பீகார் மாநிலங்களின் தேவைக்காக, 71 ரெயில்கள் மட்டும் திருப்பிவிடப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.