கொரானாவுக்கு இறப்பு எண்ணிக்கை பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது; டெல்லி முதல் மந்திரி பேட்டி

பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரானா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2020-06-26 08:56 GMT
புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிக உளவில் உள்ளது.  ஆனால், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  அதனால் கவலைப்பட தேவையில்லை.

நாங்கள் மருத்துவ பரிசோதனையை 3 மடங்கு உயர்த்தி உள்ளோம்.  ஆனால், பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரம் வரை மட்டுமே உயர்ந்து உள்ளது.  மொத்த நோயாளிகளில், தோராய அளவில் 45 ஆயிரம் பேர் வரை குணமடைந்து உள்ளனர்.

பிளாஸ்மா தெரபியால் தீவிர ஆபத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவது என்பது கடினம்.  ஆனால், மிதஅளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, அவர்களது நிலைமை கூடுதலாக மோசமடையாமல் இருப்பதற்கு இச்சிகிச்சை உதவும்.  இதுவே எங்களுக்கு கிடைத்துள்ள பரிசோதனை முடிவு ஆகும்.

எல்.என்.ஜே.பி. மற்றும் ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம்.  இதன்படி, எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சையை நாங்கள் அளிக்க தொடங்கிய பின்பு இறப்பு எண்ணிக்கை முன்பை விட குறைந்து உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்