கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-29 14:10 GMT
திருவனந்தபுரம்,

நாட்டின் பல பகுதிகளில் பரவலாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையிலும், கேரளாவில் பெருமளவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.  இதையடுத்து வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் இன்று புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 78 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள். 26 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 5 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,057 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 79 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,229 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு கேரளாவில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் தொடர்ந்து 11-வது நாளாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்