நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்வு
நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 6.73 லட்சம் பேர் இன்று வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,856 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரத்து 82 பேர் குணமடைந்து உள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்வடைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கையானது இன்று, 1 லட்சத்து 64 ஆயிரத்து 268 பேர் வரை கூடியுள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் விகிதத்தில் தேசிய சராசரியை விட, டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தோர் விகிதம் அதிகளவில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது. இவற்றில் சண்டிகர் (85.9), லடாக் (82.2), உத்தரகாண்ட் (80.9), சத்தீஷ்கார் (80.6), ராஜஸ்தான் (80.1) ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் 80 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.