அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்பு: கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் அடுத்த 2 வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவுக்குக் கடந்த சில வாரங்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். எனவே, அடுத்த இரண்டு வாரங்களில் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு ஊரடங்கு நிபந்தனைகளைத் தளர்த்தி உள்ளது. மாநிலத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எப்போதுமே மூடி வைத்திருக்க முடியாது. பொதுமக்கள் கவனத்துடன் இருந்தால் மட்டுமே நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். அக்டோபர் மாத இறுதிக்குள் நோயின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். தனிமை முகாம் நிபந்தனைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்றார்.