வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: 'கிஷான் யாத்ரா' மேற்கொள்கிறார் ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் பங்கேற்கிறார்.

Update: 2020-10-02 08:20 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்ளுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கு பல்வேறு விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தை கொண்டுசெல்லவும் ராகுல்காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவுள்ளார்.

இது தொடர்பாக  அக்கட்சியின் பொதுச்செயலாளர்  கே.சி.வேணுகோபால் கூறுகையில், “  மக்களின் உரிமைகளுக்காக போராடும் காங்கிரஸ் கட்சியை பாஜகவால் தடுத்து நிறுத்த முடியாது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல்காந்தி கிசான் யாத்ரா என்ற பயணத்தை மேற்கொள்வார்” என்றார்.

ஏற்கனவே 3, 4, 5 ஆகிய தேதிகளில் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பேரணி நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர்  4, 5, 6 ஆகிய தேதிகளில் ராகுல்காந்தி தொடர் டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் செய்திகள்