கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் பல்வேறு எம்.பி.க்கள் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் கடந்த மாதம் (செப்டம்பர்) 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அவரது உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவ குழு கண்காணித்து வந்தது
இந்நிலையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக குடியரசு துணை தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குடியரசு துணை தலைவர் செயலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,
எய்ம்ஸ் மருத்துவ குழு, குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தியது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். விரைவில், வழக்கமான பணிகளை துவங்குவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.