சிபிஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெற்றது பஞ்சாப் அரசு
பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதலை மாநில அரசு திரும்பப் பெற்றது
அமிர்தசரஸ்,
.காங்கிரஸ் கட்சி தலைமையில் அமரீந்தர் சிங் ஆட்சி செய்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு (சிபிஐ) வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பஞ்சாப் மாநில அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் இனி விசாரணை நடத்த வேண்டும் என்றால், மாநில அரசிடம் சிபிஐ முன் அனுமதி பெற வேண்டும். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் சிபிஐக்கான பொது ஒப்புதலை பெற்றுள்ளது.
சிபிஐயின் அதிகார வரம்பு
டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் மூலம் சிபிஐ அமைப்பின் அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் மத்திய ஆட்சிப்பகுதிகளின் காவல்துறைக்கு இருப்பதற்குச் சமமான அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சிறப்புக்காவல் நிறுவனமான சிபிஐக்கும் வழங்குகிறது. டெல்லியை தவிர, எந்த மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு ‘பொது ஒப்புதல்’ அளிப்பது அவசியம்.