டையுவில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டையுவில் புதிய திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2020-12-27 02:46 GMT
டையு, 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 4 நாள் பயணமாக யூனியன் பிரதேசங்களான டையு, டாமன், தத்ரா மற்றும் நாகர் ஹவேலிக்கு சென்றிருக்கிறார். அதில் 2-வது நாளான நேற்று, டையுவில் பல மேம்பாட்டுத் திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.

கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவும், தூய்மையைப் பராமரிப்பதற்காகவும் டையு யூனியன் பிரதேச நிர்வாகத்தை ஜனாதிபதி கோவிந்த் பாராட்டினார்.

நிர்வாகத்தின் முயற்சி, மக்களின் பங்கேற்பால்தான், கடந்த 2019-ம் ஆண்டு தூய்மை கணக்கெடுப்பில் டாமனும் டையுவும் முதலிடம் பெற்றதாக அவர் கூறினார்.

1961-ம் ஆண்டு டையுவை போர்ச்சுக்கீசிய ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேசன் விஜய்’ நடவடிக்கையையும் குறிப்பிட்டு ஜனாதிபதி புகழ்ந்தார். டையுவின் வரலாறு முழுவதும் வீரமும், தீரமும், தேசப்பற்றும் மிகுந்த சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன என்றார் அவர்.

மேலும் செய்திகள்