அடுத்த கட்டம் பிரதமர் மோடி- முதல்வர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாவது சுற்றில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2021-01-21 10:00 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் என்னும் கொலைகார வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

முதலில் டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கும், அவர்களை தொடர்ந்து  2 வதுகட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட நாள்பட்ட நோயாளிகள் என 27 கோடி பேருக்கும் தடுப்புசி முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் ஆகும்.

தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாவது சுற்றில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்ள  வாய்ப்புள்ளது என்று தகவல்கள்  தெரிவிக்கின்றன.  அடுத்த கட்டத்தில் முதலமைச்சர்களுக்கும் தடுப்பூசிகள் கிடைக்கும்.

இரண்டாம் கட்டம் தடுப்பூசியில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளடக்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரும் பெரும்பாலான முதலமைச்சர்களும் 50 வயது க்கு மேல் உள்ள  வரம்பில் விழுகிறார்கள்.இருப்பினும் மோடி அல்லது முதல்வர்கள் எப்போது தடுப்பூசி போடுவார்கள் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாக வில்லை

முதல் தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்தில்   முதலமைச்சர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி  அரசியல்வாதிகள் எல்லை தாண்டக்கூடாது என்றும் அவர்களின் முறைக்கு காத்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

2 வது கட்ட தடுப்பூசி இயக்கத்தில் சுமார் 27 கோடி  குடிமக்களுக்கு  தடுப்பூசி கிடைக்கும் பெரும்பாலோர் வயதானவர்களாக இருப்பார்கள்.

மேலும் செய்திகள்