பெங்களூருவில் ரூ.37 கோடி அரசு நிலம் மீட்பு - கர்நாடக அரசு நடவடிக்கை

கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்படி பெங்களூருவில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள்.

Update: 2021-03-07 19:05 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் ஏராளமான இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீட்க கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள 20.08 ஏக்கர் அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர். பெங்களூரு வடக்கு தாலுகா தாசனபுரா ஹோப்ளி குதுரெகெரே கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலம், எலகங்கா தாலுகா ஹெசருகட்டா ஹோப்ளி காலதிம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு நிலம், மாதப்பனஹள்ளி கிராமத்தில் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்த இடம், பெங்களூரு தெற்கு தாலுகா கெங்கேரி ஹோப்ளி அகர கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அரசு நிலம், உக்கரஹள்ளி அருகே கக்கலிபுரா பகுதியில் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்த இடம், பெங்களூரு கிழக்கு தாலுகா பிதரஹள்ளி அருகே பொம்மனஹள்ளி கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டிருந்த அரசு நிலம், வர்தூர் ஹோப்ளி முள்ளூரு கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அரசு நிலம் என மொத்தம் 20.08 ஏக்கர் அரசு நிலத்தை நேற்று அதிகாரிகள் மீட்டனர்.

அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். மேலும் அங்கு அரசுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகைகளையும் வைத்தனர். இந்த சம்பவத்தின்போது ஆக்கிரமிப்பாளர்கள், அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட அரசு நிலங்களின் மொத்த மதிப்பு ரூ.37 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்