சர்வதேச நெருக்கடி சூழல் பற்றி அமெரிக்க பாதுகாப்பு மந்திரியுடன் ஆலோசனை: எஸ். ஜெய்சங்கர்
சர்வதேச நெருக்கடி சூழல் பற்றி அமெரிக்க பாதுகாப்பு மந்திரியுடன் விரிவான அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது என மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று கொண்ட பின்னர் அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர், டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அவருக்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் கூறும்பொழுது, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிடுக்கு மத்திய வெளிவிவகார அமைச்சகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் அமைச்சகத்தில், சர்வதேச அளவில் காணப்படும் நெருக்கடியான சூழல் பற்றிய ஒரு விரிவான அளவிலான உரையாடல் நடந்தது. நம்முடைய இரு நாடுகளின் உயர்மட்ட நல்லுறவை வலுப்படுத்துவதற்காக அவருடன் பணியாற்ற எதிர்நோக்கி இருக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.