கர்நாடகத்தில் இன்று முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க முடிவு- லட்சுமண் சவதி

கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் இயல்புநிலை திரும்பும் என்றும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறினார்.

Update: 2021-04-07 20:53 GMT
பெங்களூரு: 

  கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பசவகல்யாணில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தனியார் பஸ்கள்

  10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கேட்டனர். அதில் நாங்கள் 8 கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம். சம்பள உயர்வும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேம். ஆனாலும் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது சரியல்ல. அவர்கள் வெளிநபரின் பேச்சை கேட்டு தவறான வழியில் செயல்படுகிறார்கள்.

  கர்நாடகத்தில் தனியார் பஸ்கள் இயங்க அனுமதி வழங்கியுள்ளோம். தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசின் அனுமதியை பெற தேவை இல்லை. பஸ்கள் இருந்தால் அவர்களாகவே அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலித்து போக்குவரத்து சேவையை வழங்கலாம். மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 10 ஆயிரம் தனியார் பஸ்கள் போக்குவரத்து சேவையை வழங்க உள்ளன.

கல்வி கற்கலாம்

  அதனால் அடுத்த 2 நாட்களில் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும். 10-ம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வி கற்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு ஆஜராக வேண்டும்.
  இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

மேலும் செய்திகள்