இரவு நேர ஊரடங்கு நாடகம் ஏன்? - கர்நாடக அரசுக்கு, சித்தராமையா கேள்வி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதாக கூறி இரவு நேர ஊரடங்கு நாடகத்தை அரங்கேற்றுவது ஏன்? என்று கர்நாடக அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2021-04-10 21:38 GMT
பெங்களூரு:

  கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

நாடகத்தை அரங்கேற்றுவது...

  கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது. தற்போது கொரோனா பரவலை காரணம் காட்டி இரவு நேரத்தில் ஓட்டல்களை திறக்கவும், தியேட்டர்களை மூடவும், கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் வருமா?. இரவு நேர ஊரடங்கு 8 நகரங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கொரோனா பரவலை காரணம் காட்டி இரவு நேர ஊரடங்கு என்ற நாடகத்தை அரசு அரங்கேற்றுவது ஏன்?.

  கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நினைத்திருந்தால், தொடக்கத்திலேயே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பரிசோதனையை முதலில் அதிகரிக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்பூசி பற்றாக்குறை

  கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி 80 நாட்கள் ஆகி விட்டது. ஆனால் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை. தற்போது கூட மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. இதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கொரோனா விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது.

  முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவை சில மாவட்ட கலெக்டர்கள் சரியாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் வருகின்றன. சில கலெக்டர்கள் துக்ளக் தா்பார் நடத்துகிறார்கள். அந்த கலெக்டர்களுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா சரியான பாடம் புகட்ட வேண்டும். நீங்களும் (எடியூரப்பா) இந்த விவகாரத்தில் பாடம் கற்று கொள்ள வேண்டும்.
  இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்