கேரளாவிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக் கோரி மத்திய அரசுக்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-04-13 10:37 GMT
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி அந்த மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கேரளத்தில் தற்போது 3 நாள்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 

கேரளத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட 56,84,360 தடுப்பூசிகளில் 48,24,505 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்