மராட்டியத்தில் போலி தடுப்பு ஊசி மருந்து விற்ற 4 பேர் கைது

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பாராமதி பகுதியில் போலி ரெம்டெசிவிர் தடுப்பு ஊசி மருந்தை 2 பேர் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2021-04-18 23:10 GMT
புனே, 

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பாராமதி பகுதியில் போலி ரெம்டெசிவிர் தடுப்பு ஊசி மருந்தை 2 பேர் விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அவர்களிடம் அனுப்பி பேசச் செய்தனர். அப்போது, அவர்கள் ஒரு குப்பி ரெம்டெசிவிர் ஊசி மருந்தை ரூ.35 ஆயிரத்திற்கு விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், இதில் 2 பேர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இவர்கள் வைத்திருந்த 3 ரெம்டெசிவிர் ஊசி மருந்து குப்பிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதில் வார்டு பாயாக வேலை பார்த்து வரும் சந்திப் கெய்க்வாட் என்பவர் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய ரெம்டெசிவிர் ஊசி மருந்தின் காலி குப்பிகளை சேகரித்து அதில் பாராசிட்டமல் திரவ மருந்தை செலுத்தி அதனை அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இவர்கள் போலி ஊசி மருந்தை வேறு யாருக்கும் விற்று உள்ளனரா என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்