உ.பி. சிறையில் கைதி துப்பாக்கி சூடு: என்.ஐ.ஏ. அதிகாரி கொலை குற்றவாளி உள்பட 3 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு நடத்திய கைதி உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர்.

Update: 2021-05-14 12:47 GMT
லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உள்ள சித்ரகூட சிறையில் பல்வேறு கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.  இவர்களில் தேசிய புலனாய்வு அதிகாரி தன்ஜில் அகமது என்பவரை பட்டப்பகலில் சுட்டு கொன்ற முக்கிம் காலா என்பவரும் ஒருவர்.

இந்நிலையில், சிறையில் இருந்த அன்சூல் தீட்சித் என்ற கைதி இன்று திடீரென துப்பாக்கியால் சக கைதிகளை நோக்கி சுட்டுள்ளார்.  இந்த சம்பவத்தில் காலா மற்றும் மற்றொரு கைதியான மெராஜுதீன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி சிறையின் காவல் கண்காணிப்பாளர் அங்கித் மிட்டல் கூறும்பொழுது, கைதி துப்பாக்கி சூடு நடத்தும் தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சென்றனர்.  போலீசார் சென்றபொழுது, 2 கைதிகளும் உயிரிழந்து கிடந்தனர்.

இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய கைதியை சரணடையும்படி கேட்டு கொள்ளப்பட்டது.  ஆனால், போலீசார் மீதும் கைதி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதனால் தற்காப்புக்காக போலீசார் அந்த கைதியை சுட்டு கொன்றனர் என தெரிவித்து உள்ளார்.



மேலும் செய்திகள்